Sunday, February 13, 2005

காதல் கவிதைகள்-2 பூமா ஈஸ்வரமூர்த்தி

மரணம் என்று சொல்
வேதனை என்று சொல்
கொடூரம் என்று சொல்
தண்ணீர் என்று சொல்
விவேகம் என்று சொல்
உற்சாகம் என்று சொல்
ரத்தருசி என்று சொல்
திருடும் கை என்று சொல்
சித்ரவதை என்று சொல்
பிணந்தின்னி என்று சொல்
காலையில் எழும்போதே காத்துகிடக்கும் நாய் என்று சொல்
விளக்கு இல்லாத ராத்திரியில் கொட்டின தேள் என்று சொல்
ரயில் ஏறிச் செத்துப்போன அவளின் கழுத்தில் கிடந்த
சேதமில்லா
மல்லிகையென்று சொல்
நல்ல புணர்ச்சியிலும் பாதியில் காரணம் தெரியாமல் அழும் பெண் என்று சொல்

காதலைக் காதல் என்றும் சொல்லலாம்.

(நன்றி:காதலைக் காதல் என்றும் சொல்லலாம்)

3 comments:

Thangamani said...

நன்றி இந்தக் கவிதைக்கு!

Anonymous said...

இந்தக் கவிதையை முன்னரே படித்திருக்கிறேன். இணையத்திலும் ஏற்கனவே இட்டிருக்கிறேனா என்று நினைவில்லை. இதன் முடிவானது - என்னைப் போன்றவர்கள் கவிதையில் இன்னும் விரும்புகிற ஒரு திருப்பம் அல்லது பஞ்ச்சுடன் இருக்கிறது என்றாலும் (திருப்பமில்லாமலும் பஞ்ச் இல்லாமலும் எழுதுவது முதிர்ச்சிதான் என்றும் ஒத்துக் கொள்கிறேன்.) - பஞ்ச்சைத் தருகிற அந்தக் கடைசிவரியைவிட அதற்கு முந்தைய வரிகள் ஏனோ அதிகமாகப் பிடித்திருந்தன. காதலைக் காதல் என்றும் சொல்லலாம் என்ற கடைசிவரி இல்லாவிட்டால் இன்னும் நன்றாக இருக்குமோ என்று எனக்குள் பிரமை.

மரணம் என்று சொல், வேதனை என்று சொல் என்ற வரிகளில் சாதாரணமாக ஆரம்பிக்கிற இக்கவிதை தண்ணீர் என்று சொல் என்ற வரியில் வேறொரு தளத்திற்குப் பெயர ஆரம்பிக்கிறது. ரத்த ருசி என்று சொல், திருடும் கை என்று சொல் என்ற வரிகளில் அந்த இன்னொரு தளத்திற்குச் சென்று ஊன்றி உட்கார்ந்து கொண்டு, மேலேறிப் பறக்க எத்தனிக்கிறது. அதற்குப் பின்வரும் வரிகளில் உயரப் பறந்து, நல்ல புணர்ச்சியிலும் பாதியில் காரணம் தெரியாமல் அழும் பெண் என்று சொல் என்ற வரியில், கைக்கெட்டா உயரத்தில் நின்று வாசகரைப் பார்த்துச் சிரிக்கிறது. இந்த வரி, கவிதையின் உச்சகட்டம்!

காதல் கவிதைகள் பெரும்பாலும் என்னைக் கவர்வதில்லை. ஸ்டீரியோ டைப்பாகவும், திரைப்படப் பாடல்களின் உத்தியுடனும், வித்தியாசம் என்ற பெயரில் துணுக்குகளாகவும் வெளிப்படுவதால். அவற்றையெல்லாம் மீறி இப்படி அரிதாய்ப் படிக்க நேர்கிற அற்புதங்கள் - முதற்காதலின் புறக்கணிப்பட்ட வலி போல (வேறு உவமை தேடித் தூண்டில் போட்டுக் கொண்டிருக்க ஒரு ஞாயிறு காலையின் ஓடுகிற பொழுதுக்கு நேரமில்லை) - மனதுள் நின்று நினைக்கும்போதெல்லாம் அவஸ்தைக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கின்றன.

நன்றி மனுஷ்ய புத்திரன்! நன்றி பூமா ஈஸ்வரமூர்த்தி!

அன்புடன், பி.கே. சிவகுமார் (PK Sivakumar)

Anonymous said...

enna aoluvatendru theriya villai, inda kavithaiyai eluthumpothu kavingar enna unarvudan eluthinaro anaithaiyum naanum unarkiraen.